
ஹொரண – மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இன்று (04) பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி வேக கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





