கிணற்றில் குதித்த பெண்ணை மீட்க முயன்றதில் தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!

517

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கொட்டாரக்கரா தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு முயற்சிகளை தொடங்கினர்.

சோனி குமார் என்ற தீயணைப்பு வீரர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி அர்ச்சனாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து, குமார் மற்றும் அர்ச்சனா மீது கிணற்றுக்குள் விழுந்தது.

மேலும் கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த அர்ச்சனாவின் நண்பர் சிவகிருஷ்ணனும் சுவர் இடிந்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், ஆனால் மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அர்ச்சனாவுக்கும் சிவகிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அர்ச்சனா கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றது தெரிய வந்துள்ளது.