
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் வீரமணி குடும்பத்திடம் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீரமணி மகள் பவானி (17), சிவகாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தூய்மைப் பணிகள் நடக்கும் போது, கனமழையால் வீட்டின் பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.
இந்த இடிபாட்டில் பவானி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பவானி உயிரிழந்தார். திருத்தங்கல் காவல்துறை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் மாணவியின் குடும்பத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





