சோகத்தில் முடிந்த திருமண மகிழ்ச்சி பேருந்து விபத்தில் 3 சகோதரிகள் பலி!!

727

தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்துடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

இதில், திருமண நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகளும் பலியானது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகாராபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியைச் சேர்ந்த எல்லையா கௌடுவின் நான்கு மகள்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே தாண்டூரில் நடைபெற்றது.

திருமண விழாவை முடித்துவிட்டு, இளைய மூன்று சகோதரிகள் — இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி நந்தினி, மூன்றாம் ஆண்டு மாணவி சாய்பிரியா மற்றும் பிளஸ் டூ மாணவி தனுஷா — ஹைதராபாத் நோக்கி பேருந்தில் பயணம் செய்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் உயிரிழந்தனர். “அதிகாலை அவர்களை பஸ்சில் ஏற்றி விட்டு வீட்டுக்கு திரும்பினேன். சில மணி நேரத்தில் டி.வியில் விபத்து செய்தி பார்த்தேன்.

என் மூன்று மகள்களையும் இவ்வாறு பிணங்களாகப் பார்ப்பேன் என்று நினைத்ததே இல்லை,” என்று தந்தை எல்லையா வேதனையுடன் கூறியுள்ளார்.

மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால் முழு கிராமமே துயரத்தில் மூழ்கியது.