
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரேஷ்மா என்ற இளம்பெண் கணவருடன் தொடர்ந்து அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் தாயாருக்கு செல்போனில் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வசரண் (25). டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பின் இருவருக்கும் இடையே சிறிய குடும்ப பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தகராறு காரணமாக, செல்வசரண் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல். வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா, மனஉளைச்சலால் தற்கொலை முடிவு செய்ததாக தெரிகிறது. தற்கொலை செய்யும் முன்,
தாயாருக்கு போன் செய்து, “நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன்” என கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதைக் கேட்ட தாயார் உடனடியாக அருகிலிருந்த உறவினர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தார்.
அவர்கள் ரேஷ்மாவின் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டியும் நீண்ட நேரமாக பதில் கிடைக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, ரேஷ்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் பெறப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1.5 ஆண்டில் இளம்பெண் உயிரிழந்ததால், விதிமுறைப்படி ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.





