நான்கு மாதத்தில் கசந்த காதல் : மனைவியின் கழுத்தறுத்து கொன்ற கணவன்!!

20

ஆசைத்தீர காதலித்து, காதலித்தவளையே கல்யாணமும் செய்துக் கொண்ட நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் காதல் கசந்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(25). அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா(19) எனும் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மதுராந்தகத்தில் வீடு எடுத்து தங்கி வந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு, மதுமிதா தொடர்ந்து செல்போனில் யாரோ ஒருவருடன் பேசுவதாக சரணுக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மனைவியை பலமுறை கண்டித்தும், மதுமிதா அதையே தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்தேகத்தின் காரணமாக சரண் மனதில் தாங்க முடியாத கோபத்தை வளர்த்துக் கொண்டு, மனைவியை இறுதியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.

சம்பவத்தன்று கோவிலுக்குச் செல்கிறோம் எனக் கூறி மதுமிதாவை ஆனந்தமங்கலம் அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சரண், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு விட்டார்.

சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்ததைப் பார்த்த சரண் அங்கிருந்து ஓடி தப்பினார். தகவல் பெற்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் தொடர்பு தொடர்பான சந்தேகத்தின் காரணமாக நான்கு மாதங்களே ஆன காதல் திருமணம் இப்படியாக கொடூரமாக முடிவடைந்தது மதுராந்தகம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.