
தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவனே நடுரோட்டில் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ் என்பவரும், கரங்கோட்டா கிராமத்தைச் சேர்ந்த அனுஷா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர் பச்சைக்கொடி காட்டவே, கடந்த மார்ச் 12-ம் தேதி இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், மூன்றே மாதங்களில் வரதட்சணைப் பிசாசு புகுந்தது. தனது மனைவி அனுஷாவிடம் கூடுதல் பணம் மற்றும் நகை கேட்டுப் பரமேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாகக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுஷாவைப் பரமேஷ் கடுமையாகத் தாக்கியுள்ளார். தனது மகள் சித்திரவதை செய்யப்படுவதை அறிந்த அனுஷாவின் தாயார், மகளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல சாய்புரி கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, மாமியாரிடம் நைசாகப் பேசிச் சமாதானம் செய்த பரமேஷ், “இனி இதுபோல நடக்காது” என்று கூறி அனுஷாவைத் தன்னுடனேயே இருக்கச் சம்மதிக்க வைத்துள்ளார்.
ஆனால், தாயார் சென்ற சில நிமிடங்களிலேயே பரமேஷின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டது. வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அனுஷாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரமேஷ்,
ஆத்திரத்தில் அங்கிருந்த ஒரு பெரிய உருட்டுக் கட்டையை எடுத்து அனுஷாவைச் சரமாரியாகத் தாக்கினார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் பலத்த காயமடைந்த அனுஷா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அனுஷா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மனைவியைக் கொன்றுவிட்டுத் தலைமறைவான பரமேஷ் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அனுஷாவைப் பரமேஷ் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது.
காதலித்துத் திருமணம் செய்த பெண்ணையே வரதட்சணைக்காக அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





