வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு!!

231

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.

பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காலநிலை அவதானிப்பு அறிக்கையில்,

வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்குத் திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவிற்கு அருகாக நிலை கொண்டுள்ளது.

இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்குக் கிடைத்து வரும் மழை இன்றிரவு முதல் படிப்படியாகக் குறைவடையும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மழை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஆனால், இடையில் ஒரு சில நாட்கள் மழையற்ற நாட்களாக அமையும். இதேவேளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு மழை கிடைக்கத் தொடங்கும்.

இந்த பிரதேசங்களுக்கும் மழை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மீண்டும் எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான காலநிலை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது. விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில்கொண்டு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என்றுள்ளது.