இலங்கையில் புதிய உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!!

322

கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி இன்றைய தினம் (29.01.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 384,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 420,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 9520 ரூபா உயர்ந்து ஒரு சவரன் ரூ 134,400 இற்கும், கிராமுக்கு 1190 ரூபா உயர்ந்து ஒரு கிராம் 16,800 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.

அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

அதன்படி, இன்று (29) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டது. நேற்று (28) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.