குடும்பப் பெண்ணை காப்பாற்ற முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி : பறிபோன உயிர்கள்!!

174

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த பெண் மற்றும் உயிரிழந்தவரின் மனைவி இருவரும் மீன் வாங்குவதற்கு புலையவெளி ஆற்றுக்கு சென்ற போது வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலிக்கு மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன் போது உயிரிழந்த பெண் நீர் உள்ள பகுதியிலும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியில் விழுந்துள்ளனர். நீரில் விழுந்தவரை காப்பாற்றுமாறு அழைத்துள்ளனர்.

இதன் போது குறித்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த ஆணும் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார் மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை அயலவர்கள் உடனடியாக துண்டித்து இருவரையும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.