வவுனியா நெடுங்கேணியில் “கிவுல் ஓயா வேண்டாம்” என மக்கள் போராட்டம்!!

317

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் கிவுல் ஓயாத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் கண்டனபேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் ஏற்ப்பாட்டில் வவுனியா நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி பிரதான வீதிவழியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றது. அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், கிவுல் ஓயா திட்டம் தீட்டப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதும் இதுவரை பிரதேச மக்களுடனோ, பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் மற்றும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் கலந்துரையாடப்படவில்லை.

அதன்திட்ட முன்மொழிவில் புதிய குடியேற்றவாசிகள் குடியேற்றப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எமது பிரதேசத்தின் இனப்பரம்பலை பாதிக்கும் ஒரு செயற்ப்பாடு. திட்ட நோக்கத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படவுள்ளன.

இலங்கையில் எங்கும் காணப்படாத தாவர மற்றும் விலங்கு வகைகள் அழிவடைவதன் அபாயமும், தாவர விலங்குகளின் முழுமையான அழிவும் ஏற்படும். அத்துடன் இத்திட்டத்தினால் ஏற்கனவே உள்ள யானை–மனித மோதல் மேலும் மோசமடையும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடிவைத்தகல் மற்றும் பட்டிக்குடியிருப்பு கிராமசேவையாளர்கள் பிரிவுகளுக்கு சொந்தமான தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 13,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வனவள திணைக்களத்தினால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் கூட சிறையில் அடைக்கும் வனவளத் திணைக்களம், யுத்தத்தினால் கைவிடப்பட்ட குளங்களைப் பயன்படுத்த அனுமதிக்காத வனவளத் திணைக்களம் என்ன நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியை மேற்படி திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளனர்.

அரசே? இனப்பரம்பலை மற்றும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்ற உங்களின் வாக்குறுதி எங்கே? கடந்த அரசாங்கங்களை போல எமது வாழ்வுரிமையை பறிக்க இந்த அரசு விரும்புகிறதா,

பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சிறுபான்மை மக்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள், மகாவலி–எல் வயத்திற்குக் வெளியே வாழ்வாதாரத்திற்கான நீர்த்தட்டுப்பாடு இல்லையா? இந்த கேள்விகளை உங்களிடம் முன்வைக்கிறோம்.

அத்துடன் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை தமிழ்மக்களாகிய நாம் முற்றாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்தனர்.

ஒன்றிணைந்த தமிழ்க்கட்சிகளினால் ஏற்ப்பாடுசெய்யப்பட்ட இவ் எதிர்ப்புப் பேரணியில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.