
இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும்.
முக்கியமாக ‘பழம் தின்னும் வௌவால்கள்’ (Fruit bats) மூலம் பரவுகிறது. அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும்.
இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த வைரஸிற்குச் சிகிச்சையளிக்கத் தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை.
அதோடு தீவிரமான மருத்துவக் கண்காணிப்பு (Supportive care) மட்டுமே ஒரே வழி ஆகும். iந்நிலையில் இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute – MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது.





