யாழ். பல்கலைக்கழகம் செல்லும் வீதியில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!!

239

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி, அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் இன்று (15.02.2026) பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி நோக்கி பயணித்த மகிழுந்து கார் மற்றும் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடுமையாக காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து மகிழுந்து காரில் காயமடைந்த நபரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், வாகனத்தை செலுத்தி வந்தவர் திருக்கோணமலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் காயமடைந்த நபரை அவசர சிகிச்சைப் பிரிவில் ஒப்படைத்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.