நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இன்று முதல் ரத்து!!

135

இலங்கையில் இன்றைய தினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடயத்தை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவு இனி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரையில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட தொகைகள் மீள அறவீடு செய்யப்படும் என சிலர் வதந்திகளை கிளப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் செலுத்தப்பட்ட தொகைகள் எதுவும் மீள அறவீடு செய்யப்படாது என அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் கிடையாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கோடியே 44 லட்சம் ரூபாய் ஓய்வூதிய கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது நியாயம் இல்லை என்பதே தமது நிலைப்பாடு என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.