மனநோயாளியான தாய் ஒருவர் தனது ஆறு வயது மகளை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று வெலிமடை அம்பகஸ்தொவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வெலிமட அம்பகஸ்தொவ பகுதியை சேர்ந்த மனநோயாளியான பெண் ஒருவர் தனது ஆறு வயது மகளை கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்தியுள்ளார். இதனை அடுத்து குறித்த குழந்தையின் தந்தை உடனடியாக குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மயக்கமருந்தியல் வைத்திய உதவியாளர்கள் இல்லாமையினாலேயே அவர் கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.





