பொலிஸ் நிலையத்தில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் : ஆபத்தான பெண் தப்பியோட்டம்!!

219

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தில் தடுப்புக்காவல் உத்தரவில் இருந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரக் கடமை அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களாகப் பணியாற்றிய இரண்டு சார்ஜென்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்பிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமில் நிறுவப்பட்ட சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் குழுவினரால் குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இரத்மலானையில் உள்ள மெலிபன் சந்தி-அத்திடிய பிரதான வீதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 36,650 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், கடந்த 16 ஆம் திகதி பெண் கான்ஸ்டபிளுடன் கழிப்பறைக்கு சென்ற போது, ​​காவலில் இருந்து தப்பிச் சென்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் தப்பியோடிய சந்தேக நபர் 8 மணி நேரத்திற்குப் பிறகு அதே நாளில் தலவதுகொடவின் கிம்புலா எல பகுதியில் சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.