
இலங்கையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ள போதிலும், பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூடுதல் மற்றும் ‘வீட்டிலிருந்து வேலை’ (Work From Home) போன்ற முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இது போன்ற நடவடிக்கைகள் இலங்கையிலும் எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
பொருளாதாரத்தின் ஒரு பகுதியை முடக்குவதன் மூலம் எரிபொருள் நுகர்வைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் இலங்கையில் எரிபொருள் நுகர்வு பாரியளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.





