எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் : மக்களுக்கு வந்துள்ள புதிய அறிவிப்பு!!

438

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 4,800 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 4,045 மெட்ரிக் தொன் பெட்ரோல் நுகரப்படுகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கியூ.ஆர். முறைமை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

மார்ச் மாதத்தில் கிடைக்கவுள்ள மற்றும் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருளின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம் வரை போதுமான எரிபொருள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நாட்டில் கியூ.ஆர். முறைமையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் அளவு, பல்வேறு தொழில்சார் தேவைகளைக் கருத்தில் கொண்டு விரைவில் திருத்தப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு ஒரு ஆரம்ப கட்டமே எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சில துறையினரின் தேவைகள் ஆராயப்பட்டு புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படும்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள், விவசாயத் துறையில் ஈடுபடுபவர்கள், வாடகை வாகனங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் என்பன இதன்போது கவனத்தில் கொள்ளப்படும்.

உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஒதுக்கீட்டு முறை குறித்து அச்சமடைய வேண்டாம். அடுத்த சில நாட்களில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.