அரச ஊழியர்களுக்கான புதன்கிழமை விடுமுறை : அரசாங்க தரப்பிலிருந்து வெளியான காரணம்!!

27

அரசாங்க சேவைகள் நீண்டகாலத் தடங்கலின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே புதன்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் உருவாகியுள்ள எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அரச துறைக்குப் புதன்கிழமை விடுமுறை வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

சாதாரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக விடுமுறை வரும்போது, அலுவலகப் பணிகள் பல நாட்களுக்குப் பாதிக்கப்படுகின்றன.

இது பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கும் அரசாங்கப் பொறிமுறையில் பெரும் தேக்கநிலையை உருவாக்குகின்றது.

வாரத்தின் நடுப்பகுதியான புதன்கிழமைக்கு விடுமுறையை மாற்றுவதன் மூலம், நீண்டகாலத் தடங்கல் இன்றி அரசாங்க நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுக்க முடியும்.

இந்த தீர்மானத்தின் ஊடாக அரசாங்க அலுவலகங்களை முற்றாக மூடாமல், பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் வார முழுவதும் அத்தியாவசியப் பணிகள் இயங்குவதை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் அதேவேளை, நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு முடங்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தத் தீர்மானத்தின் அடிப்படை நோக்கம்.” – என்றும் விளக்கமளித்துள்ளார்.