பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் : நெருக்கடியை தவிர்க்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவிப்பு!!

211

தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்டது அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டின் நிர்வாகத்தைச் சரியான முறையில் முன்னெடுத்து வருகின்றது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பும் ஒரு சிறிய குழுவினரைத் தவிர, ஏனைய சாதாரண பொதுமக்கள் நாட்டின் உண்மையான நிலையை உணர்ந்துள்ளனர்.

ஊடகங்கள் கருத்துச் சேகரிக்கச் செல்லும்போது, உண்மையை மறைப்பவர்களை மக்கள் புறக்கணிப்பதிலிருந்தே இதனைப் புரிந்துகொள்ளலாம். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை ஒரு விசேட சூழலாகும்.

குறைந்தபட்சம் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் கூட கடந்த காலங்களில் நாட்டில் முறையாக உருவாக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி புள்ளிவிவரங்களுடன் சபையில் விளக்கியுள்ளார்.

முன்னைய ஆட்சியாளர்களின் இவ்வாறான பலவீனங்களே இன்றைய நிலைக்குக் காரணமாகும். தற்போது நிலவும் நெருக்கடியை மக்கள் மீதான அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் அரசு பொறுப்புடன் நிர்வகிக்கும்.

பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தற்போது கியூ.ஆர். குறியீடு மூலம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, எரிபொருளைப் பதுக்கி வைக்காமல், அரசின் முறையான வழிமுறைகளைப் பின்பற்றி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்களைத் தவிர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது உறுதியளித்தார்.