மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம் : வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் : பெண்ணுடன் ஐவர் கைது!!

692

மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்களைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மந்துவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நகைகள் மற்றும் பணம் உட்பட சுமார் 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றிருந்தனர்.

இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

திருடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, முல்லைத்தீவு நீதவானின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் முதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் ஒன்று , இயந்திரம் இரண்டு உந்துருள்ளிகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மந்துவில் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் என்பதுடன், இவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் இரணைப்பாலை, மந்துவில், சிவநகர் மற்றும் பல பகுதிகளில் தொடர்ச்சியாகக் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் கடந்த 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.