
நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எனவே காடுகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு பயணம் செய்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
வறண்ட காற்று மற்றும் கடும் வெப்பம் நிலவும் சூழலில், மிகச்சிறிய தீப்பொறி பாரிய அளவிலான வனப்பகுதியை அழிக்கும் நிலை உள்ளமையினால் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல்களைக் கட்டுப்படுத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் பேரிடர் மேலாண்மை மையம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
எனவே தீப்பரவல்கள் அல்லது அவசர நிலைமைகள் குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மும்மொழிகளிலும் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதால், விழிப்புணர்வுடன் செயற்பட்டு அனர்த்தங்களைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.





