இலங்கையில் கடும் வெப்பம் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட சுகாதார அறிவுறுத்தல்கள்!!

39

இலங்கையில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களின் அன்றாடச் செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீரிழப்பு மற்றும் வெப்பத்தாக்கம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறித்து பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எம். சதுன் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயுள்ளவர்கள் இந்த வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தசைப்பிடிப்பு, தோல் பாதிப்புகள் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அவர்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நண்பகல் வேளைகளில் வெளிப்புற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சிகளை அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் வெளிப்புற பணிகளை மேற்கொள்வோர் காலை 10.30 மணிக்கு முன்னதாக அல்லது மாலை 3.30 மணிக்குப் பின்னர் தமது கடமைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

மேலும், உட்புறச் சூழலில் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்ய ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒரு நாளைக்கு 2.5 லீற்றருக்கும் அதிகமான நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

அதேவேளை, சீனி கலந்த பானங்கள், மென்பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்குமாறும், சிறுநீரின் நிறத்தைக் கொண்டு உடலில் உள்ள நீரின் அளவை அவ்வப்போது அவதானிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெளியே செல்லும்போது குடை, தொப்பி மற்றும் தளர்வான ஆடைகளைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

அத்துடன், வெயிலில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் நுழைவதற்கு முன்னர், ஜன்னல்களை திறந்து உட்புற வெப்பத்தை வெளியேற்றுமாறு சாரதிகளுக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.