
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிசக்தியை நிர்வகிப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்களுக்கான எரிசக்தி சேமிப்பு குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள சூழலில், வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளார்.
வெசாக் மற்றும் போசன் பண்டிகைகளுக்கு அரசாங்கம் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தாது என்றும், அரசாங்கம் ஆதரவை வழங்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, வரவிருக்கும் வெசாக் பண்டிகை, போசன் பண்டிகை, எசலப் பண்டிகை மற்றும் பிற மத ரீதியான திட்டங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும்,உலகில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எரிசக்தி மற்றும் நுகர்வு கோட்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.





