கோர விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம் : சாரதி கைது!!

292

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த பெண் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்தின் மிதிபலகையில் ஒரு காலினை வைத்து ஏறும் போது தவறுதலாக வீதியில் வீழ்ந்துள்ளனர். இதன்போது பெண்ணின் மீது பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இரு கால்களும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினமும் ஹட்டன் முதல் நுவரெலியா வரை சேவையில் ஈடுபடும் பேருந்து இன்றைய (31) தினம் இயங்கவில்லை எனவும், இதனால் குறித்த பேருந்து தலவாக்கலையில் இருந்து புறப்படும் போதே அதிக பயணிகள் இருந்துள்ளனர்.

இதனால் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பேருந்தினை நிறுத்தாமல் பாரிய வளைவு ஒன்றில் பேருந்தினை மெதுவாக இயக்க முற்பட்டபோது குறித்த பெண் பேருந்தினை நிறுத்துவதாக நினைத்து பேருந்தில் ஏறுவதற்கு முயன்ற போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த வீதியில் பேருந்து சேவை உரிய முறையில் ஈடுபடாமையே குறித்து விபத்துக்கு காரணம் என பொதுமக்களும் குற்றம் சுமத்துகின்றன. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.