
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் அருகே உள்ள தொட்ட ஹெஜ்ஜூரு கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த 7 மாத ஆண் குழந்தை செம்பருத்தி பூவின் காம்பை விழுங்கியதால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சுதர்சன் மற்றும் நவ்யா தம்பதியினரின் மகனான சின்மயி என்ற அந்தச் சிறுவன், வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வீட்டின் பூஜை அறை கதவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த செம்பருத்தி பூவை எடுத்து விளையாடிய குழந்தை, எதிர்பாராத விதமாக அதன் காம்புப் பகுதியை விழுங்கியுள்ளது.
சமையல் அறையில் தாய் நவ்யா வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தையின் அண்ணன் தம்பியின் வாயில் பூவின் காம்பு சிக்கியிருப்பதைப் பார்த்து எடுக்க முயற்சி செய்துள்ளான்.
ஆனால், அந்தக் காம்பு குழந்தையின் தொண்டையில் ஆழமாகச் சிக்கிக் கொண்டதால் சிறுவனால் சுவாசிக்க முடியாமல் திணறல் ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுவாசப் பாதையில் பூவின் காம்பு சிக்கியிருப்பதை உறுதி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
மருத்துவர்களின் தீவிர முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 7 மாதக் குழந்தை சின்மயி பரிதாபமாக உயிரிழந்தான்.
தன் கண் முன்னாலேயே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இப்படி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து உன்சூர் புறநகர்க் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.





