
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே இயந்திர பிரச்சினைக் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விரைவான நடவடிக்கை

விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாவும் ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த இடத்திற்கு கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் விரைந்த பிரதேச வாசிகள், வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.





