வவுனியாவில் சகோதரன் நடத்திய கத்திக்குத்து : பெண் பரிதாப மரணம்!!

458

வவுனியா, செக்கடிப்புலவு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, செக்கடிப்புலவு கிராமத்தைச் சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று (08.04) இரவு, செல்வமலருக்கும் அவரது சகோதர முறையான ஒருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபோதையில் இருந்த குறித்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வமலரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், காயங்கள் பலமாக இருந்தமையால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடியாகக் களமிறங்கிய பூவரசங்குளம் பொலிஸார், தலைமறைவாக இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட தனிப்பட்ட கோபமே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.