வறுமையால் வெளிநாடு சென்ற தாய் : சடலத்தையாவது பார்க்க உதவுமாறு அரசாங்கத்திடம் கோரும் மகள்கள்!!

56

குவைத்திற்கு சென்ற தமது தாய் உயிரிழந்துள்ள நிலையில், அவரை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என திருகோணமலை வெருகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவன் பகுதியைச் சேர்ந்த திலக்சாணி (25) மற்றும் கிருசாணி (23) ஆகிய இரு சகோதரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் எப்படியாவது அம்மாவின் சடலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கமாக கோரியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2008ஆம் ஆண்டு இந்தச் சகோதரிகளின் தந்தை சிவலிங்கம் வனராசா அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை தந்தை வருவார் என்ற ஏக்கத்துடனேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர். குடும்பத் தலைவன் இன்றி தவித்த வேளையில், தற்துணிவுடன் எழுந்து நின்றவர் இவர்களின் தாய்.

தன் இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி மீனா குவைத் நாட்டுக்குத் தொழில் நிமித்தம் சென்றார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மாரடைப்பு காரணமாக குவைத்தில் காலமானார் என்ற செய்தி வந்து சேர்ந்துள்ளது.

தந்தை காணாமலாக்கப்பட்ட துயரம் ஒருபுறம் இருக்க, தற்போது தாயையும் இழந்து நிற்கும் இந்தப் பிள்ளைகள், தங்களது தாயின் பூதவுடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக இலங்கைக்குக் கொண்டு வர உதவுமாறு அரசாங்கத்திடமும், உரிய அதிகாரிகளிடமும் மன்றாட்டமாகக் கோருகின்றனர்.

குறித்த சகோதரிகள் கூறுகையில், அப்பா காணாமல் ஆக்கப்பட்ட போது எங்களுக்குச் சிறிய வயது. அவருக்கு இறுதிச் சடங்கு கூட செய்யக் கொடுத்து வைக்கவில்லை. அந்த வலி இன்றும் எங்களை வாட்டுகிறது.

இப்போது எம்மை வளர்த்து ஆளாக்கிய அம்மாவும் பிரிந்துவிட்டார். அவரின் முகத்தையாவது கடைசியாக ஒருமுறை பார்த்து, முறைப்படி இறுதி மரியாதைகளைச் செய்ய எங்களுக்கு வழிவகுத்துத் தாருங்கள் என உருக்கமாக கோரியுள்ளனர்.

இந்த இரு இளம் பெண்களின் எதிர்காலத்தையும், அவர்களது நியாயமான கோரிக்கையையும் கருத்திற்கொண்டு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.