வவுனியாவில் பெண்ணின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர் : சிசிரிவி காட்சிகளுடன் பொலிஸில் முறைப்பாடு!!

61

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சகோதரர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரர்களின் நிதியுதவியுடன், குறித்த பெண்மணி தனது வீட்டுத் தோட்டத்தில் அண்மையில் 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வந்துள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில், தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர் தோட்டத்தில் நடப்பட்டிருந்த அனைத்து வாழை மரங்களையும் வெட்டிச் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சில கட்டிடப் பொருட்களையும் களவாடிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குறித்த பெண்மணியால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மர்ம நபர் பயிர்ச் செய்கையைச் சேதப்படுத்தும் மற்றும் திருட்டில் ஈடுபடும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி (CCTV) கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிசிரிவி காட்சிகளில் உள்ள நபர் அல்லது இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கோ (+94 75 143 0702) அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.