இலங்கையில் பதிவானது அதிகூடிய வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

244

பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அவதான மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம்(15.04.2026) வவுனியாவில் பதிவான 36.6°C வெப்பநிலை, நாட்டின் மிக உயர்ந்த வெப்பநிலையாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பொலன்னறுவை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் தலா 36.0°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணிய வேண்டும் என்றும், கடுமையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.