
குருணாகல் – கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (16) மெடலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொது வீதியொன்றில் வைத்து ஒரு குழுவினர் , பெண்ணைத் தாக்குவது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.
தாக்குதலின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் , “நாங்கள் ஒரு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அது முடிந்த பிறகு, நாங்கள் வீட்டிற்குத் திரும்பினோம். அங்கே சாப்பிட்டுவிட்டுப் புறப்படலாம் என்று எண்ணி, சுமார் ஒன்றரை மணி நேரம் நாங்கள் அங்கேயே தங்கியிருந்தோம்.
நாங்கள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வழியில், அவளுடைய (மகளின்) மூத்த சகோதரியின் மகன் ஒருவன், திடீரென எங்கள் காரின் முன்பாக வந்து குதித்தான். அவன் சாலையின் நடுவே வந்து நின்றான்.

வாகனம் வருவதை அவன் பார்த்திருந்தபோதிலும், அவன் ஓரமாக விலகிச் செல்லவில்லை. அவன் காரின் முன்பாக, ‘பானட்’ (bonnet) பகுதிக்கு அருகில் நின்றுகொண்டான்.
என் கணவர் உடனடியாக ‘பிரேக்’ பிடித்துக் காரை நிறுத்திய மறுகணமே, திடீரென்று ஒரு கும்பல் இரும்புத் தடிகள் மற்றும் வாள்களுடன் வெளியே பாய்ந்து வந்து, எங்களை ஈவு இரக்கமின்றித் தாக்கியதாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
உறவினர்களுக்கு இடையிலான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீதியில் வைத்து பெண் மீது பலர் முன்னிலையில் நடத்தப்பட்ட ஈவிரக்கம்ற தாக்குதலுக்கு சமூக வலைத்தளவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.





