முன் ஜென்ம சம்பவங்கள் : அதிசய சிறுவனைக் காண செல்லும் மக்கள்!!

552

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில், மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்கிம்பூர் மாவட்டம், மைலானி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் – ராம்பெட்டி தம்பதியினருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பையனுக்கு ‘ஜீதன்’ எனப் பெயரிட்டனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜீதனுக்கு மூன்று வயதான போது, அவன் தனது மழலைப் பேச்சில் விசித்திரமான விஷயங்களைக் கூறத் தொடங்கினான். தன்னுடைய வீடு ‘போலாப்பூர்’ கிராமத்தில் இருப்பதாகவும், தனது தந்தையின் பெயர் ‘விதேசி’ என்றும் அவன் அடம்பிடிக்கத் தொடங்கினான்.

ஆரம்பத்தில் விளையாட்டுத் தனமாகப் பார்த்த பெற்றோர், சிறுவன் விடாப்பிடியாக அழுததால் அவனை அந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். போலாப்பூர் கிராமத்தில் உள்ள விதேசி என்பவரது வீட்டுக்குச் சென்றதும், ஜீதன் உற்சாகமடைந்தான்.

அங்கிருந்த விதேசியைப் பார்த்ததும், “இவர்தான் என் அப்பா” என்று ஓடிச் சென்று கட்டிக்கொண்டான். அதுமட்டுமின்றி, விதேசியின் மனைவி வசந்தியைப் பார்த்து, “இவள் தான் என் அம்மா” என்று கூறி அனைவரையும் அதிர வைத்தான்.

சிறுவன் ஜீதன் அங்கிருந்த பொருட்களைப் பார்த்து, அவை ஒவ்வொன்றும் எங்கு வைக்கப்பட்டிருக்கும் என்ற ரகசியங்களையும், தனது பழைய உடமைகளையும் சரியாக அடையாளம் காட்டினான்.

விசாரணையில், விதேசியின் மகன் திலீப் (வயது 30), கடந்த 2012-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு கடற்கரையில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

தூரம் அதிகமாக இருந்ததால், திலீப்பின் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. திலீப் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜீதன் பிறந்துள்ளான்.

தனது முந்தைய பிறவியின் பெற்றோர், வீடு மற்றும் அங்குள்ள பொருட்களைச் சிறுவன் துல்லியமாக அடையாளம் காட்டியதைக் கண்டு இரு குடும்பத்தினரும், கிராம மக்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த ‘அதிசய’ சிறுவனைக் காண அண்டை கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.