புங்குடுதீவு வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!!

382

நாட்டை உலுக்கிய புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று(06.05.2026) உறுதி செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் நாட்டில் பாரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களுக்கு, முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.

இந்தநிலையில், தங்களை விடுவிக்கக் கோரி குற்றவாளிகள் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, பிரதம நீதிபதி பத்மன சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை விசாரணை செய்து நான்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து இன்று தீர்மானத்தை அறிவித்துள்ளது.

மேலும், இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 2015ஆம் ஆண்டு மே 13 திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மூவரடங்கிய நீதிபதிகள் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.