
கேகாலை மாவனெல்லை – ஹேலிஸ்வத்த பகுதியில் மா ஓயாவில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், தனது நண்பன் ஒருவனுடன் இணைந்து மா ஓயாவில் நேற்று(10.05.2026) நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீரோட்டத்தில் சிக்கிய சிறுவன் நீரில் மூழ்கியதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் பலனின்றிப் போயுள்ளது. மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் அரநாயக்க வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாவனெல்லையின் பல பகுதிகளில் மா ஓயாவின் நீர்மட்டம் மற்றும் நீரோட்டம் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நீர்நிலைகளில் நீராடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




