வவுனியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!!

12

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வவுனியாவில் நேற்று பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இறுதிப் போரின் போது எவ்வித உணவுப் பொருட்களும் இன்றி பட்டினியால் வாடிய தமிழ் மக்களுக்கு, கஞ்சி எவ்வாறு ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் இளைய தலைமுறைக்கும் உலகிற்கும் நினைவுபடுத்தும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் நேற்று (12.05) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வீதியால் சென்ற பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. போர்க்கால நினைவுகளைச் சுமந்தபடி பலரும் உணர்வுபூர்வமாக கஞ்சியினை அருந்திச் சென்றனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் இந்தக் ‘கஞ்சி’, தமிழர்களின் வரலாற்றில் ஒரு துயரமான குறியீடாகப் பார்க்கப்படுகிறது. அந்த வலிகளை மறக்காமல் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாகவே வவுனியாவில் இன்று இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.