வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நீதி கோரி தீர்மானம்!!

15

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் 11வது சாதாரண சபை அமர்வு நேற்று நடைபெற்ற போது முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து உருக்கமான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

சபை அமர்வின் ஆரம்பத்தில் தவிசாளர் முகமட் இம்தீயாஸ் மற்றும் உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். மே மாதம் என்பது தமிழர் நெஞ்சங்களில் என்றும் ஆறாத ரணமாக உறைந்து போயுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சபையின் சார்பில் அதிகாரப்பூர்வ அஞ்சலி உரையை உறுப்பினர் சங்கரன் சசிக்குமார் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து போரில் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்காகவும் சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து உரையாற்றிய உப தவிசாளர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது போர்க்குற்றம் என்றும் அதற்கு முறையான சர்வதேச விசாரணை அவசியமென்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் நிகழாதிருக்க நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இறுதியாக உயிரிழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தியதுடன் ‘நாம் மறக்கவில்லை மன்னிக்கவும் மாட்டோம்’ என்ற முழக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் தவிசாளர் உப தவிசாளர் மற்றும் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.