முல்லைத்தீவில் பெரும் துயரம் : திருமணம் நடைபெறவிருந்த இளைஞன் திடீர் மரணம்!!

136

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த இளைஞர் நேற்று முன் தினம் (18) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞன் சம்பவம் நடந்த இரவு ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு உணவருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் தனது தாயிடம் சூடான தண்ணீர் வைத்துத் தருமாறு கேட்டுள்ளார். தாய் தண்ணீர் கொடுத்ததும் அதை அருந்திய அவர் தனது அறைக்குச் சென்று உறங்கியுள்ளார்.

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் மகன் எழுந்துவராததால் சந்தேகமடைந்த தாய், அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, மகன் உயிரிழந்த நிலையில் படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி அழுதுள்ளார்.

இதையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு பரிசோதனையில் மாரடைப்பே உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.