அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு : இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!!

110

இலங்கையில் அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலை உயர்வு, மின்சாரம், நீர் கட்டணங்கள் உயர்வு மற்றும் ஏற்றுமதிக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்யும் செலவு கணிசமான அளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு இணையாக பணவீக்கமும் கணிசமான அளவில் உயரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு டொலர் மூலமே இறக்குமதி செய்யப்படுகின்றது.

இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலைகள் வேகமாக உயரும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வானது போக்குவரத்து கட்டணங்கள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் மற்றும் பொதுச் சேவைகளின் விலை உயர்வுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலைமையின் கீழ், சாதாரண மக்களின் மாதாந்திரச் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, முன்பை விட அதிகளவிலான ரூபாய் தொகையை செலவிட வேண்டியிருக்கும்.

டொலரின் மதிப்பு அதிகரிப்பால் சில ஏற்றுமதியாளர்கள் பயனடைந்தாலும், உற்பத்திக்குத் தேவையான இறக்குமதி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அவர்களின் இலாப வரம்பு மற்றும் உற்பத்திப் போட்டித்தன்மை கடுமையான சவாலுக்கு உள்ளாகலாம் என மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 345 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளது.

இதேவேளை, டொலரின் மதிப்பு உயர்வு என்பது தேவை அதிகரிப்பால் ஏற்பட்ட ஒரு தற்காலிக சூழ்நிலை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.