
வள்ளத்திலிருந்து தவறி விழுந்து அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நயினாதீவு – குறிகட்டுவான் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட அதிபரான நடராசா மயூரன் என்பவரே மேற்படி பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் , பயணிகள் படகினை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர்.
அதன் போது, கடற்காற்று காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடலையில் அடிப்பட்டமையால் , படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.
அதனை அடுத்து, உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட நிலையில் , அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்னாள் அதிபரும், நயினாதீவு கணேச மகா வித்தியாலய தற்போதைய அதிபருமாவார்.
பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் புங்குடுதீவில் மேற்கொள்ளப்படும் கல்வித் திட்டங்களுக்கு குறித்த அதிபர் பேருதவியாக செயற்பட்டார். குறித்த அதிபரின் இழப்பு புங்குடுதீவு மண்ணுக்குப் பேரிழப்பாகும்.




