
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீட்டில் தந்தை இல்லாத நேரத்தில் தனது 11 வயது சகோதரி கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் சகோதரனே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இன்று (30.05.2026) குறித்த சிறுவன் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை (28.05.2026) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா, என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவரின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதுடன், தந்தையின் பராமரிப்பில் 14 வயது சிறுவனும், 11 வயது சிறுமியும் வளர்ந்து வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று தந்தை வேலைக்காக வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது தண்ணீர் தொட்டிக்குள் குறித்த சிறுமி சடலமாக கிடந்து, மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில், குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சிறுமி தான் வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்தக் காரணத்தினால் சகோதரனுக்கும், சிறுமிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, சகோதரியின் கழுத்தை நெரித்ததையடுத்து அந்த இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
அதன்பின்னர், சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடிய வேளையில், சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுமி உயிரிழப்பு தொடர்பில், 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் தான் சகோதரியை கொலை செய்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.




