சென்னையை உலுக்கிய இலங்கைத் தமிழ்ப் பெண் கொடூர கொலை : விசாரணையில் வெளியான தகவல்!!

117

புதிய இணைப்பு : சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சியொன்றின் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை வந்த யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்று நடனமாடியபோது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இருதரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றிய நிலையில், சாலையில் வந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது மற்றொரு தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றிகொலை செய்துள்ளனர்.

முதலாம் இணைப்பு : சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30.05.2026) இடம்பெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 18 வயதான யான்சி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அந்த இளம்பெண் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பாரில் இருந்த ஒரு கும்பல் அவரை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இளம்பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுமி பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து உடலைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கொலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.