பாடசாலை பரீட்சைக் காலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

138

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம் கல்விப் பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணைகள் மற்றும் பாடசாலைத் தவணைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம்,2020ஆம் ஆண்டுக்கு முந்தைய கால அட்டவணைக்கேற்ப கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும் பாடசாலைத் தவணைகள் மாற்றம் பெறவுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கல்வி நடவடிக்கைகள், பரீட்சைக் கால அட்டவணைகளில் மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைகளை அடிக்கடி மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கல்வி நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும் பாடசாலைத் தவணைகளை அவற்றின் வழக்கமான கால அட்டவணைக்கு மாற்ற கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும், உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெறவுள்ளது.

அத்துடன் பாடசாலைத் தவணைகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதற்கு ஏதுவாக வருடத்தின் எஞ்சியுள்ள இரண்டு பாடசாலைத் தவணைகளிலும் நீண்ட விடுமுறை வழங்கப்படவுள்ளது.