எரிபொருள் கியூஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

28

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறைமையை எதிர்காலத்திலும் கடுமையாக செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஓரளவிற்காவது தணிக்கப்படும் என நம்பப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது, ​​உலக எரிபொருள் சந்தையில் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், பெரும் அளவிலான அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறி வருகிறது.

எனவே, நாட்டிலிருந்து வெளியேறும் டொலர்களின் அளவை குறைக்க நாம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும், விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, தற்போது செயல்படுத்தி வரும் கியூஆர் (QR) முறையை இன்னும் சற்று கடுமையாக நடைமுறைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.