
புத்தளம் நகருக்கு மேலாக வானில் நெருப்பு பிழம்புகளை ஏற்படுத்தியவாறு, ஏவுகணை போன்றதொரு பொருள் தென்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 4.31 மணியளவில் ஏவுகணைக்கு சமமான இந்த பொருள், அந்த நேரத்தில் புத்தளம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த மக்களாலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை நேரில் பார்த்தவர்கள், இது சில அடிகள் நீளமுடையதாக காணப்பட்டதுடன், ஏவுகணை ஒன்று ஏவப்படும் போது வெளிவரக்கூடிய பாரிய நெருப்புப் பிழம்புகளை உமிழ்ந்தவாறு பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
எனினும், சிலர் இதனைத் தமது கையடக்க தொலைபேசி காணொளி எடுத்துள்ளதுடன், இன்னும் சிலர் இதைப் பார்த்து அச்சமடைந்தும் அதிர்ச்சியடைந்தும் ஒளிந்துகொள்ள முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தரைமட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரத்தில் இப்பொருள் பயணித்ததாகவும், பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் இருந்து மறையும் வரை அது தொடர்ந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இது குறித்து பாதுகாப்புப் பிரிவினர் எவரும் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.




