வவுனியா மாநகரசபை தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!!

244

வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளதைத் தொடர்ந்து, வவுனியாவில் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து எதிரணியினரால் தொடரப்பட்ட வழக்கில், அவர்களது செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இத்தடை உத்தரவுக்கு எதிராக மாநகர சபை முதல்வர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், பிரதி முதல்வர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இன்று இவ்வழக்கை பரிசீலித்த உயர் நீதிமன்றம், முதல்வர் தலைமையிலான மாநகர சபை இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம், பிரதி முதல்வர் தொடர்பான இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையிலும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மாநகர சபை இயங்குவதற்கான தடை நீக்கப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வவுனியாவில் ஆதரவாளர்கள் இடையே உற்சாகமான சூழ்நிலை ஏற்பட்டது.

வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வரின் ஆதரவாளர்கள் மாநகர சபை வாயில் முன்பாக ஒன்றுகூடி, பட்டாசுகளைக் கொளுத்தி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

மேலும் , திருநாவக்குளம் பகுதியிலும் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புகள் வழங்கி இந்த வெற்றியைக் கொண்டாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாநகர சபை தொடர்பான இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.