கோர விபத்தில் பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயதுச் சிறுமியின் உயிர்!!

22

கண்டி மாவட்டத்தின் தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு வயது மற்றும் இரண்டு மாதங்கள் வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (03) பிற்பகல் தென்னகும்பூர – ராகல பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தென்னகும்பூர நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நேரத்தில், குறித்த சிறுமி தனது பெற்றோருடன் முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் தாக்கத்தால் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் படுகாயமடைந்து உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி உனுவின்ன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே, காயமடைந்த சிறுமியின் தாயும் முச்சக்கரவண்டியை செலுத்திய தந்தையும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சொகுசு காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலாத்துஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.