கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக பலி!!

80

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள், இரண்டு பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹாரே மற்றும் அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜினி மஹேஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தாயார் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். உயிரிழந்த மகள் ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 27ஆம் மைல்கல் பகுதியில், தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மூன்று சக்கர வண்டி ஒன்று மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் பின்னர் படுகாயமடைந்த தாயும் மகளும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி மகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்