வவுனியாவில் இலங்கையின் முதலாவது மின்சாரச் சேமிப்பு மின்கலக் கட்டமைப்புத் திட்டம் ஆரம்பம்!!

185

இலங்கையில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், நெருக்கடியான காலப்பகுதிகளில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் பிரம்மாண்டமான புதிய திட்டமொன்று வவுனியாவில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுகர்வுக்கு மேலதிகமாக உள்ள மின்சாரத்தை அதிநவீன தொழில்நுட்ப மின்கலங்களில் (Battery Storage System) சேமித்து வைத்து, மின்சாரப் பற்றாக்குறை அல்லது நெருக்கடி ஏற்படும் நேரங்களில் அதனை மீண்டும் பகிர்ந்தளிப்பதே இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையின் கீழ், மின்சார வீணடிப்பைத் தடுத்து, மேலதிக மின்சாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலேயே முதன்முறையாக இத்தகையதொரு அதிநவீன மின்சாரச் சேமிப்பு மின்கலக் கட்டமைப்பு வவுனியாவில் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டமைப்பில் திடீர் முறிவுகள் அல்லது மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் போது, இந்த மின்கலங்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்சாரம் உடனடியாக நுகர்வோருக்குப் பகிரப்படும் , அதிக செலவுள்ள மின் உற்பத்தி முறைகளுக்கான தேவையைக் குறைத்து, நுகர்வுக்குப் பிந்தைய உபரி மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வழிவகுக்கும் , சூரிய சக்தி மற்றும் காற்று ஆற்றல் மூலம் பெறப்படும் மேலதிக மின்சாரத்தை வீணாக்காமல் சேமிக்க போன்றன இத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நன்மைகள் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்டம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பும் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

தற்போது வவுனியாவில் மின்கலக் கட்டமைப்பை நிறுவும் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மிக விரைவில் இத்திட்டம் முழுமையான மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.