தெல்தெனிய சடலம் மீட்பு : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிசார்!!

103

தெல்தெனியவில் வாகனமொன்றினிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணின் காதலனான,

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் இருந்தால், நுவரெலியா பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, 071 8591096 உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், நுவரெலியா 071 8591097 தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர், நுவரெலியா ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து நேற்று (17) மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்,

நுவரெலியாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் இரண்டு முறை தங்கியிருந்தமை நுவரெலியா பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரியவருகிறது.

பெண்ணின் காதலனான சந்தேகநபர் 02ஆம் திகதி அந்த இளம் பெண்ணுடன் விடுதிக்கு வந்து, 10ஆம் திகதி விடுதியிலிருந்து வெளியோறி சென்றுள்ளார் பின் 16ஆம் திகதி அந்த இளம் பெண் மாத்திரம் தனியாக விடுதிக்கு வந்துள்ளார்.

அத்துடன் 17ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில், சந்தேகநபர் வாடகைக் காரில் விடுதிக்கு வந்து, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதிப் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்து,

தனது காதலியை ஏற்றிக்கொண்டு, விடுதிக் கட்டணத்தைச் செலுத்தி, அந்த இளம் பெண்ணைக் காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் குறித்து விடுதிப் பாதுகாப்பு அதிகாரி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் கூறுகையில், அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வருபவரும் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான பி.ஆர்.ஷ்யாமா தர்ஷனி,

2023 முதல் மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி, தனது வேலையை ராஜினாமா செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளனர்.

அவரது காதலரான, கண்ணொரூவாவைச் சேர்ந்த 35 வயதான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க, தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.